ராணுவ புரட்சி பீதியில் பாக்-அதிபர் சர்தாரி எங்கே?
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரமதரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ள கராச்சி முதல் இஸ்லாமாபாத் வரையிலான நடைபயணம் இன்று தொடங்குகிறது.
ராணுவப் புரட்சி வெடிக்கும் அபாயத்தின் பின்னணியில், ஈரான் சென்றிருந்த அதிபர் சர்தாரி நேற்று இரவு நாடு திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டாலும் அவர் எங்கேயிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனால் பாகிஸ்தானில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் முழுவதும் பெரும் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை கவனியுங்கள், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் சர்தாரிக்கு, ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கியானி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல சர்தாரிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும் இடையிலான யுத்தமும் வேகம் பிடித்துள்ளது. நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடு முழுதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெரும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஷெரீபும் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
நாடு திரும்ப சர்தாரிக்கு தடை:
உள்துறை அமைச்சகம் எந்த முடிவை எடுத்தாலும் எங்களைக் கேட்டு விட்டுத்தான் செயல்படுத்த வேண்டும் என ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரான் சென்றிருந்த சர்தாரி மீண்டும் நாடு திரும்ப வேண்டாம் என ராணுவத் தரப்பி்ல் அறிவுறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தானில் எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கும் அபாயம் எழுந்தது.
இந்த பரபரப்பான பின்னணியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி மற்றும் பிற நீதிபதிகளை மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நவாஸ் ஷெரீப் கட்சியினர் இன்று கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற தருணம் வரலாற்றில் அடிக்கடி கிடைக்காது. எனவே பொதுமக்களும், வக்கீல்களும், கட்சியினரும் பெரும் திரளாக இதில் பங்கேற்று இதை பெரும் வெற்றி அடையச் செய்ய வேண்டும். உங்களது நாட்டின் எதிர்காலம் இப்போது உங்களது கையில். எனவே இதை யாரும் தவற விட்டு விடக் கூடாது என்று நவாஸ் ஷெரீப் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தடை மீறி நாடு திரும்பிய சர்தாரி?:
இதற்கிடையே தனக்கு ராணுவம் தடை விதித்ததால் நவாஸ் ஷெரீப்பின் போராட்டம் முடியும் வரை அதிபர் சர்தாரி நாடு திரும்ப மாட்டார் என்றும், ஈரானில் இருந்து அவர் துபாய் சென்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், சர்தாரி நேற்று இரவோடு இரவாக இஸ்லாமாபாத் திரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
நிலைமை மோசமாகி வருவதால் தளபதி கியானி ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று சர்தாரி எதிர்பார்க்கிறார்.
இதற்கு இடம் கொடுக்காமல் நவாஸ் ஷெரீப்புடன் சமரசமாக சென்றுவிடவும் அவர் முயற்சித்து வருகிறார். பஞ்சாபில் கவர்னர் ஆட்சியை வாபஸ் பெற்று மறுபடியும் நவாஸ் ஷெரீப் தம்பி ஆட்சி அமைக்க உதவவும் அவர் தயாராக இருப்பதாகத் தெரிறது.
முன்னதாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட இம்ரான் கான் விடுவிக்கப்பட்டதும் தலைமறைவாகிவிட்டார். அவரும் சர்தாரிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.