சத்யம் ஏலம்: ரேஸில் எல் அண்டு டி, ஸ்பைஸ், டெக் மஹிந்திரா!
சென்னை: பெரும் நிதி மோசடிகளால் கலகலத்துப்போன சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வாங்க எல் அண்டு டி, டெக் மஹிந்திரா மற்றும் ஸ்பைஸ் குழுமம் ஆகியவை மோதுகின்றன.
இந்தப் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்ற நேற்று வியாழக்கிழமை கடைசி நாள். அதனால் நேற்றே இந்த மூன்று நிறுவனங்கள் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டன.
இம்மூன்று நிறுவனங்களில் எல் அண்டு டி நிறுவனத்திடம் ஏற்கெனவே 12 சதவிகித சத்யம் பங்குகள் உள்ளன. எனவே இந்தப் போட்டியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதே அதன் நோக்கமாக உள்ளது.
பி.கே. மோடியின் ஸ்பைஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விமானப் போக்குவரத்துடன், ஐடி மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் கால்பதிக்கும் நோக்கில் சத்யம் பங்குகளை வாங்க முனைகிறது.
ஆனால் டெக் மஹிந்திராவின் திடீர் போட்டிதான் பலரும் எதிர்பாராத ஒன்றாக உள்ளது. ஐடி துறையில் டெக் மஹிந்திராவுக்கென்று தனி இடம் உள்ளது. இப்போது சத்யம் நிறுவனத்தையும் வாங்குவதன் மூலம் ஐடி துறையில் தனிப்பெரும் நிறுவனமாக முதலிடத்துக்கு வர முயல்வது தெரிகிறது.
தற்போது சத்யம் பங்குகளை வாங்க பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு விரைவில் கடிதங்கள் அனுப்பப் படும். குறைந்தபட்ச ரொக்க இருப்பு ரூ.1500 கோடி வைத்துள்ள நிறுவனங்கள் இறுதி ஏலத்தில் கலந்து கொள்ளத் தகுதியுடையவையாகக் கருதப்படும். அடுத்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20-ம்) தேதி மாலை 5 மணிக்குள் இந்தத் தொகையை தயாராக வைத்திருக்க வேண்டும், ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள்.
ஏலத்துக்கு முந்தைய தினம், பங்குச் சந்தையில் நிலவும் மதிப்பின் அடிப்படையில் சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகள் ஏலத்தில் விடப்படும்.