திமுக கூட்டணியில் தொடர அன்புமணி நெருக்கடி-பாமகவில் குழப்பம்
கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது பாமக. ஆனால் காலத்தின் கோலமாய் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் வாய்ச்சண்டை ஏற்பட்டு விரிசல் பெரிதாகி விட்டது. அதிரடியாக, பாமகவை கூட்டணியை விட்டே நீக்கியது திமுக. ஆனால் இப்போது அதற்காக மனதுக்குள் வருந்திக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் பாமகவை தக்க வைக்க காங்கிரஸ் படு மும்முரமாக உள்ளது. தங்கபாலுவைத்தான் இந்த விஷயத்தில் திமுக தரப்பு முழுமையாக நம்பியுள்ளது. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பல்வேறு அஸ்திரங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. 8 சீட் தருகிறோம், கூடவே ராஜ்யசபா சீட் ஒன்றையும் தருகிறோம் என வலை வீசியுள்ளது அதிமுக.
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை கடுமையாக விமர்சித்த கட்சி பாமக. கிட்டத்தட்ட கடந்த 2 வருடமாய் திமுக, பாமக இடையே பல காரணங்களுக்காக மோதல்கள் நடந்தன.
கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டே ராமதாஸுக்கும், திமுக தலைவர்களுக்கும் இடையே நடந்த வார்த்தைப் போர்கள் வரலாறு காணாதவை. மிக மிக கடுமையாக மோதிக் கொண்டனர் அக்கட்சிகளின் தலைவர்கள்.
உச்சகட்டமாக முதல்வர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார் பாமக பொருளாளரான காடுவெட்டி குரு. தலையை கொண்டு வருவோம் என்றும் முழங்கினார். இதற்காக கைதாகி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சமரசமாகி அவரை வெளியே கொண்டு வந்து விட்டார்கள் - அது தனிக் கதை.
திமுக பக்கம் பாமக படக்கென்று சாய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் - இலங்கை விவகாரம். திமுக இத்தனை காலம் சேர்த்து வைத்திருந்த தமிழின பாதுகாப்பு என்ற அஸ்திவாரத்தையே பாமக அசைத்துப் பார்க்கக் காரணமாக அமைந்தது இலங்கை விவகாரம் தொடர்பாக அவர் நடத்திய போராட்டங்கள்.
இடை விடாமல் அவர் நடத்திய போராட்டங்களால் திமுகவே கலகலத்துப் போய் விட்டது. கருணாநிதியும் சற்றே சோர்வடைந்து போனார் என்பதுதான் உண்மை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மறுபடியும் திமுகவுடன் கை கோர்த்தால் அது வாக்காளர்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்ற ஐயம் பாமக தரப்பி்ல இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தொண்டர்களே திமுகவினரோடு இணைந்து செயல்படுவார்களா என்ற சந்தேகம் ராமதாசுக்கு.
ஆனாலும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் தான் நாம் நீடிக்க வேண்டும், அது தான் நமக்கு மரியாதை என்கிறாராம் மத்திய அமைச்சர் அன்புமணி. இதனால் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் ராமதாஸ் என்கிறார்கள்.
மேலும் திமுக தரப்புடன் அவரே நேரடியாக பேசி வருவதாகவும் தெரிகிறது. ஒரு இடமாவது கூடுதலாகத் தந்தால் தான் தன்னால் கட்சியினரை சமாதானப்படுத்த முடியும் என்றும் முதல்வர் கருணாநிதியிடமே அன்புமணி கூறியதாகத் தெரிகிறது.
அன்புமணி மட்டும் இந்த நிலையை எடுத்திருக்காவிட்டால் எப்போதோ அதிமுக கூட்டணிக்குள் பாமக போயிருக்கும்.
இந்தப் பின்னணியில், பாமக தலைவர்களுடன் பல்வேறு கோணங்களில் கடந்த சில நாட்களாக ராமதாஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி சேர விடாமல் அன்புமணி தான் தடுக்கிறார் என்பதால் அன்புமணிக்கு எதிராகவே சில மாவட்டங்களில் போஸ்டர்களும் ஒட்டி வருகின்றனர் சில பாமகவினர்.
இந் நிலையில் வரும் 18ம் தேதிக்குள் பாமக பொதுக்குழு கூடும் எனத் தெரிகிறது. அந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.