கேரளத்தில் சிபிஎம்-சிபிஐ மோதல்: சமரசம்
திருவனந்தபுரம்: கேரளத்தில் இடப் பங்கீடு தொடர்பாக மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
பொன்னானி தொகுதி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இடதுசாரிக் கூட்டணியை விட்டு விலகுவதாகவும் தனித்தே 20 இடங்களிலும் போட்டியிடுவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து டெல்லியில் இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் சந்தித்துப் பேச்சு நடத்தி பிரச்சனையை தீர்த்தனர்.
பொன்னானி தொகுதியை இடதுசாரி கூட்டணியில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஒதுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டமிட்டது. ஆனால், இது தனது தொகுதி என்பதால் அதை இந்திய கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை.
இதையடுத்து அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே போட்டியிட திட்டமிட்டு வேட்பாளரை அறிவித்தது. இதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவி்ல்லை. அங்கு நாங்களே போட்டியிடுவோம் என அறிவித்து வேட்பாளரையும் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கைகள் வெளியிட, கூட்டணியை விட்டு வெளியேறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் நேற்று காலை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இரவு டெல்லியில் இரு கட்சிகளின் தேசியத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தத் தொகுதிக்கு இரு கட்சிகளும் அறிவித்த வேட்பாளர்கள் வாபஸ் பெறப்பட்டனர்.
இரு கட்சிகளும் இணைந்து பேசி, தொகுதி யாருக்கு என்பதை முடிவு செய்து புதிய வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.