பாக் 30 கேள்விகள்-இந்தியா 400 பக்க பதில்
டெல்லி: மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கேட்டிருந்த 30 கேள்விகளுக்கு இந்தியா 400 பக்கங்களுக்கும் மேலான பதில் அறிக்கையை பாகிஸ்தானிடம் அளித்துள்ளது.
மும்பை தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியா ஆணித்தரமான பல ஆதாரங்களை தந்த போதும் கூட இன்னும் திருப்தி அடையாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
கேள்வி மேல் கேள்வியாக கேட்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் சளைக்காமல் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவிடம் 30 கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரியிருந்தது பாகிஸ்தான். அந்த கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலைத் தயாரித்தது.
பாகிஸ்தான் கேட்ட 30 கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட பக்கங்களில் பதில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் அஜ்மல் கஸாப் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மற்ற 9 தீவிரவாதிகளின் டி.என்.ஏ சோதனை அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த பதில்கள் பாகிஸ்தானிடம் அளிக்கப்படவுள்ளன. நேற்று இந்த பதில்கள் அடங்கிய அறிக்கை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதை முகர்ஜியிடம் கொடுத்தார்.
பாகிஸ்தான் கேட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் மிக மிக விரிவாக பதிலளித்துள்ளோம் என்று கூறினார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
மேலும் அவர் கூறுகையில், மும்பையில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என உண்மையிலேயே பாகிஸ்தான் அரசு நினைக்குமானால் அதற்கு இந்த பதிலே போதுமானது.
இந்த பதில்களைப் பெற்றுக் கொண்டு பாகிஸ்தான் அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதையடுத்து பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக்கை அழைத்து இந்த பதில் அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் அவரிடம் அளித்தது.