கூட்டணி தொடர்பாக திமுகவிலிருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை - ராமதாஸ்
சென்னை: திமுகவிலிருந்து லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவிலிரு்நது இதுவரை யாரும் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று முதல்வர் கருணாநிதி நேற்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னையில் கருத்து தெரிவித்த ராமதாஸ், திமுகவிலிருந்து யாரும் எங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
எப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை செய்யவுள்ளோம். பின்னர் பொதுக்குழு நான்கைந்து நாட்களில் கூடவுள்ளது. அப்போது முடிவெடுப்போம் என்றார்.
விஜயகாந்த்தை வரவேற்போம் என்று கருணாநிதி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, நான் சில கேள்விகளுக்கு எப்போதும் பதில் தருவதில்லை. அதேபோல சில பேரைப் பற்றிய கேள்விகளுக்கும் பதில் தருவதில்லை. எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார் ராமதாஸ்.
இதற்கிடையே, விஜயகாந்த் வந்தால் வரவேற்போம், நல்ல செய்தி எங்கிருந்தாலும் வரவேற்போம் என்று முதல்வர் கருணாநிதியே பகிரங்கமாக கூறியுள்ளதன் மூலம், பாமகவுக்கான கதவை அவர் சாத்தி விட்டதாகவே அரசியல் அரங்கில் கருதப்படுகிறது.