கோர்ட் உள்ளே வரைக்கும் பாதுகாப்பு கேட்கிறார் சாமி
மதுரை: மதுரையில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு வரும்போது, கோர்ட் உள்ளே வரைக்கும் தனது பாதுகாப்பு படையினரை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியம் சாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..
மதுரையில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கோர்ட் ஹால் வரையிலும் பாதுகாப்பை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும். இசட் பிரிவின் கீழ் எனக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சி.ஆர்.பி.எப் வீரர்களை என்னுடன் வர அனுமதிக்க வேண்டும்.
இப்படி எனக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால்தான் வழக்கு விசாரணையின்போது என்னால் கோர்ட்டுக்கு வந்து எனது பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார் சாமி.
கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவரது பாதுகாவலர்களை கோர்ட் ஹாலுக்கு வெளியேயே நிற்கும்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிப்ரவரி 17ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்ய சாமி உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை வக்கீல்கள் அடித்து உதைத்தனர். முட்டைகளையும் வீசித் தாக்கினர். நீதிபதிகள் முன்பாகவே நடந்த இந்த அமளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 19ம் தேதி சில வக்கீல்களை போலீஸார் கைது செய்யப் போக, அதை தடுத்த நிறுத்த வக்கீல்கள் முயல, உயர்நீதிமன்ற வளாகமே போர்க்களமாக மாறி பெரும் வன்முறையில் முடிந்தது.
இந்த நிலையில்தான் தனது பாதுகாவலர்களை நீதிமன்ற அறைக்குள்ளும் வர அனுமதிக்கக் கோரி கேட்டுள்ளார் சாமி.