கணக்கு காட்டாத 3,423 வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை
டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அதற்கான செலவு கணக்கை காட்டாத 3,423 வேட்பாளர்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் 3 ஆண்டு தடை விதித்துள்ளது.
கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் மீறி பலர் தங்களது கணக்கு காட்டவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவம் சட்ட பிரிவ 10 ஏயின் படி மூன்று ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கப்படும் என அறிவித்தது.
இதை தொடர்ந்து தற்போது கணக்கு காட்டாத 3,423 வேட்பாளர்களுக்கு அடுத்து மூன்றாண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகபட்சமாக உபியை சேர்ந்த 1075 பேரும், பீகாரை சேர்ந்த 616 பேரும் உள்ளனர். இவர்களில் அனேகர் அங்கு சட்டமன்ற தேர்தலில் நின்றவர்கள். மேலும் இவர்களில் 99 சதவீதம் பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.
உபியில் தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டவர்களில் 7 பேர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள். இந்த எண்ணிக்கை பீகாரில் 15 ஆக இருக்கிறது.
அதேபோல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்குமாறு வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு என சில வருமானத்துறை அதிகாரிகளை கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications