நடத்தை விதி மீறலைக் கண்காணிக்க 155 குழுக்கள்
சென்னை: சென்னை தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் மீறலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 155 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அனைத்து வட்டங்களிலும் அமலாக்கப்படுவதைக் கண்காணிக்க 155 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துப் பேசுகையில், சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னையில் உள்ள 155 வட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளர்கள் தலைமையில் தலா ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த வட்டங்களில் டிஜிட்டல் பேனர்கள் நிறுவுதல், விளம்பரம் செய்வது ஆகியவற்றில் தேர்தல் நடத்தை விதி மீறல் இருந்தால் இக் குழுக்கள் கண்காணித்து தகவல் அளிக்கும். இதன்பேரில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது சென்னையில் வாக்காளர் சரிபார்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, மொத்த வாக்காளர்கள் 31 லட்சத்து 22 ஆயிரத்து 96.
இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை. கடந்த 3 நாள்களில் மட்டும் 25 ஆயிரம் கூடுதல் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் செய்வோரில் தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெறாமல் தனியார் கட்டடங்களிலும் சுவர் விளம்பரங்களைச் செய்யக் கூடாது. இதை மீறுவோர் மீது புகார் தெரிவித்தால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் லக்கானி.












Click it and Unblock the Notifications