வீட்டுகாவலில் நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் - பாக்.கில் பதட்டம் அதிகரிப்பு
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மூன்று நாள் வீட்டுக் காவலில் வைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல இன்னொரு எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக பாகிஸ்தான் அரசியலில் குழப்பமான சூழ்நிலைகள் நிலவுகின்றன. நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபஸ் ஷெரீப் ஆகியோர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதற்கு அதிபர் சர்தாரி தான் காரணம் என ஷெரீப் சகோதரர்கள் நினைக்கிறார்கள்.
மேலும் கடந்த ஆட்சிகாலத்தில் முஷ்ராபால் நீக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இவ்விஷயங்களில் சர்தாரி அலட்சிய போக்கை மேற்கொள்ள இவர்கள் நாடுமுழுவதும் தங்களது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் பிரிவு சார்பில் நடை பயணம் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இதை ஒடுக்க சர்தாரி அரசு முயன்றது. ஆனால் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால் தனது முயற்சிகளை சர்தாரி கைவிட்டார்.
இந்நிலையில் இந்த பேரணி நடந்து நாட்டில் சட்ட ஒழுங்கு சீராகாமல் போனால் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படும் என ராணுவ ஜெனரல் கியானி மிரட்டல் விடுத்தார்.
மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒரு சமரசத் திட்டத்தையும் சர்தாரியிடம் தெரிவித்தனர். இதை ஏற்பது போல முதலில் நடந்து கொண்டார் சர்தாரி. இருப்பினும் திடீரென நேற்று ஜகா வாங்கி விட்டார்.
இந்த நிலையில் ஷெரீப் கட்சி தொடங்கிய நடை பயணம் நாளை இஸ்லாமாபாத்தில் முடிவடைவதாக உள்ளது. இன்று லாகூரில் நடைபயணத்தில் ஷெரீப் சகோதரர்கள் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்நிலையில் அதை தடுக்க பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இன்று காலை 8.00 மணி்க்கு நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் வீட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ளார். 3 நாட்கள் அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல அவரது தம்பி சபாஷ் ஷெரீப்பும் ராவல் பிண்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அவர் போலீஸாரை ஏமாற்றி விட்டு இஸ்லாமாபாத் வந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது கட்சியின் தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள மக்தூம் ஜாவித் ஹஸ்மி கூறுகையில், நவாஸ் இன்று காலையில் வீட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் பொருட்டு இதை செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தான் கைது செய்யப்பட போவதை முன்கூட்டியே அறிந்திருந்த நவாஸ் ஷெரீப் தான் கைது செய்யப்பட்டாலும் மற்றவர்கள் போராட்டத்தை தொடர வேண்டும் என தனது கட்சி தொண்டர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
லாகூரில் குவியும் வக்கீல்கள், தொண்டர்கள்
இப்படி பல்வேறு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், லாகூரில் ஆயிரக்கணக்கான வக்கீல்கள், கட்சித் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர் இதனால் இங்கு பதட்டம் அதிகரித்துள்ளது.
லாகூர் உயர்நீதிமன்றப் பகுதியை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், காஸ் விற்பனை நகர் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப் கட்சியினரின் நடைபயணத்தால் பதட்டம் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இஸ்லாமாபாத்துக்கு நடைபயணத்தில் பங்கேற்றுள்ள யாரும் நுழையாமல் தடுக்கும் வகையில் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.