பிரபாகரன் போர் முனையில் இருக்கலாம்: ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தப்பி ஓடவில்லை. அவர் வன்னியில் பதுங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
போர் முற்றி, பல பகுதிகளை ராணுவம் பிடித்து விட்டதால் மலேசியாவுக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ பிரபாகரன் தப்பிப் போயிருக்கலாம் என இலங்கை மீடியாக்கள் சில செய்தி வெளியிட்டன.
ஆனால் பிரபாகரன் தப்பவில்லை. அவர் வன்னிப் பகுதியிலேயே பதுங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், பிரபாகரன் வன்னிப் பகுதியில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பிரபாகரன் அப்பகுதியில் இருப்பதால்தான் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம்.
தற்போது விடுதலைப் புலிகள் வசம் 35 சுதர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியே உள்ளது. இந்த பகுதியில்தான் பிரபாகரன் பதுங்கியிருக்கக் கூடும்.
புதுக்குடியிருப்பைச் சுற்றிலும் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இது எத்தனை நாள் நீடிக்கும், எப்போது புதுக்குடியிருப்பு வீழும் என்று தெரியவில்லை (முன்னதாக புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக இரண்டு முறை ராணுவம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது).
கடந்த வாரம் புதுக்குடியிருப்பில் உள்ள புலிகளின் மருத்துவமனை பிடிபட்டது. அங்கிருந்த புலிகளின் காவல் நிலையமும் பிடிக்கப்பட்டது என்றார் நாணயக்காரா.
இதற்கிடையே, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதில்லை என்று பிரபாகரன் உறுதி எடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலிய வானொலிக்கு அளித்த விடுதலைப் புலிகள் இயக்க செய்தித் தொடர்பாளர் திலீபனும், பிரபாகரன் எங்கும் ஓடவில்லை. போர் முனையில்தான் இருக்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அனைவரும் வீரர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.