கார் கவிழ்ந்து விபத்து - கவிஞர் தமிழச்சி படுகாயம்
வேலூர்: வேலூரில் நடந்த கார் விபத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கையும், திமுக பேச்சாளருமான கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் படுகாயமடைந்தார். மேலும் இருவரும் காயமடைந்தனர்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் நேற்று சேலத்திலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
பிற்பகல் 12.30 மணியளவில் அவர் வந்த கார் வேலூர், வள்ளலார் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலைத் தடுப்புக் கம்பிகளை மோதி உடைத்து அடுத்த சாலையில் போய் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் கார் டிரைவருக்கு பலத்த அடிபட்டது. அவரது உடலில் கார் கண்ணாடியின் உடைந்த பாகங்கள் பாய்ந்தன. தமிழச்சியும், அவரது பாதுகாவலரும் காருக்குள் சிக்கிக் கொண்டனர்.
விபத்து நடந்ததைக் கேள்விப்பட்டு போலீஸார் விரைந்து வந்தனர். காருக்குள் சிக்கியிருந்த தமிழச்சியையும், பாதுகாவலரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். படுகாயமடைந்த நிலையில் 3 பேரும் சி.எம்.சி. மருத்துவமனைக்ககு கொண்டு வரப்பட்டனர்.
3 பேரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். டிரைவருக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு முதுகு மற்றும் நெஞ்சுப் பகுதியில் அடிபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அங்கு வலி இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து அறிந்ததும் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் காந்தி மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்த்தார்.












Click it and Unblock the Notifications