விஜய்காந்துடன் கூட்டணிக்கு முயற்சி-இல.கணேசன்
அவர் அளித்துள்ள பேட்டியில்,
நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தமிழக பாஜக முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சரத்குமார் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்களும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட ஆர்வமாக உள்ளனர்.
தேமுதிகவும் பாஜகவுடன் சேருவது பற்றி ஆய்வு செய்து வருகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் பாஜக மட்டுமே இயற்கையான கூட்டணியாக இருக்கும். எங்களது அழைப்பை தேமுதிக புறக்கணிக்கவில்லை. சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கொடுத்துள்ளது. இந்த தொகுதி பங்கீடு பேச்சு தொடக்க நிலையில் உள்ளது.
திமுக அல்லது அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கட்சிகளிடம் அவர் கூட்டணி சேர்ந்தால் அவர் தனித்துவத்தை இழந்து விடுவார் என்பது என் கருத்து.
அவர் நாடாமன்றத் தேர்தலை விட 2011ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் தான் அதிக கவனம் செலுத்துவார் என்று நினைக்கிறேன்.
விஜயகாந்த் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அவருக்குள்ள தனித்துவமான இமேஜ் இருக்கும். ஆனால் வெற்றி கிடைக்குமா என்று சொல்ல இயலாது. தேர்தலை அவரால் புறக்கணிக்கவும் இயலாது.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் அவருக்கு தனித்துவம் நீடிக்கும்.ஆ னால் இது பற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டியது விஜயகாந்த் தான்.
தற்போதைய நிலவரபடி கூட்டணி தொடர்பாக குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு தெளிவு ஏற்பட்டதும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.
கார்த்திக்குடனும் பாஜக பேச்சு?:
அதே போல நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக்குடனும் பாஜக பேசி வருவதாகத் தெரிகிறது.
அவர் அதிமுகவுக்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடன் பாஜக பேச ஆரம்பித்துள்ளது.
ஆன்மீகவாதிகள் பாஜகவுக்கு உதவ வேண்டும்..:
இந் நிலையில் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா ஓர் ஆன்மிக நாடு. ஆன்மிகத்துக்கு எதிரான எந்தவொரு முயற்சியையும் இந்த நாடு இறுதியில் நிராகரித்து விடும். இந்த நாட்டின் ஆதாரமாக விளங்கும் பண்பாட்டினை அழித்திட எத்தனையோ அன்னிய சக்திகள் முயற்சித்தும் வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் நாடு விடுதலை பெற்ற பிறகு, மதச்சார்பின்மை என்கிற போர்வையில் இந்த நாட்டின் பண்பாட்டை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போலி மதச்சார்பற்றவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை விடுவித்து இந்த நாட்டின் பண்பாட்டையும், ஆன்மிக அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டும்.
அதற்கு, பண்பாட்டைப் பாதுகாக்க விரும்பும் ஆன்மிகவாதிகள் இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.