ஒரே தொகுதியை கேட்கும் சிபிஎம்-சிபிஐ: அதிமுக குழப்பம்
சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுகவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுக்கள் இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டன.
அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முதலி்ல் வரதராஜன் தலைமையிலான சிபிஎம் குழு ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக குழுவுடன் பேசியது. அதிமுக சார்பில் மதுசூதனன், ஜெயக்குமார், தம்பித்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் குழுவில் டி.கே.ரங்கராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த வரதராஜன் கூறுகையில், 2வது கட்டமாக பேசியுள்ளோம். அதிமுக தரப்பில் பல நல்ல ஆலோசனைகளைக் கூறியுள்ளனர். நாங்களும் எங்களது மாற்று ஆலோசனையை அவர்களிடம் கூறி உள்ளோம். அடுத்த கட்டமாக மீண்டும் கூடிப்பேசி தொகுதிப் பங்கீட்டில் சுமூக தீர்வைக் காண்போம் என்றார்.
அவரிடம், இரண்டு சுற்று பேச்சு முடிந்த பிறகும் உடன்பாடு ஏற்படவில்லையே, ஏதேனும் சிக்கல் உள்ளதா, எத்தனை தொகுதிகளை அதிமுகவிடம் கேட்கிறீர்கள் என் நிருபர்கள் கேட்டனர். ஆனால் வரதராஜன் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மறுத்து விட்டார்.
அவர்களைத் தொடர்ந்து தா.பாண்டியன், நல்லகண்ணு, பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய சிபிஐ குழு அதிமுக குழுவுடன் பேச்சுவார்த்தையை நடத்தியது.
வழக்கத்துக்க மாறாக சில தொகுதிகளை இரு இடதுசாரி கட்சிகளும் கேட்பதாகத் தெரிகிறது. இதில் இரு தரப்புமே பிடிவாதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் யாருக்கு அந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என்பதி்ல் அதிமுகவுக்கு சி்க்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த இரு கட்சிகளைத் தொடர்ந்து மதிமுக குழுவினர் அதிமுகவுடன் 3வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications