ஆதரவாளர்கள் 'ஜகா'-ஆள் பிடிக்கும் கண்ணப்பன்!
கோவை: மதிமுகவிலிருந்து வேகமாக விலகி, திமுகவில் சேரப் போவதாக அறிவித்து விட்ட கண்ணப்பன், தனது ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், திமுகவில் சேர மறுத்து விட்டதால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். இதையடுத்து தனது குடும்பத்தோடு ஆதரவாளர்களை வீடு தேடிச் சென்று பல்வேறு உறுதிமொழிகளைக் கூறி திமுகவில் சேர்ந்து விடுமாறு கெஞ்சி வருகிறாராம்.
மதிமுக அவைத் தலைவராக இருந்த கண்ணப்பன் சமீபத்தில் கட்சியிலிருந்தும், எம்எல்ஏ. பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார்.
சூட்டோடு சூடாக அவரை அமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சி அருகே உள்ள கண்ணப்பனின் பண்ணை வீட்டுக்குச் சென்று சந்தித்து திமுகவில் இணைய அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்ற கண்ணப்பன், வருகிற 23ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைகிறார்.
தன்னுடன் ஏராளமான பேர் இணையப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் அப்படி இணையப் போவதாக கூறிய பலரும் இப்போது முடியாது என்று மறுத்து விட்டனராம். இதனால் கண்ணப்பன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆலாம்பாளையம் பண்ணை வீட்டில் வைத்து தனது ஆதரவாளர்கள், மதிமுக முக்கியப் பிரமுகர்களுடன் கண்ணப்பன் ஆலோசனை நடத்தியபோது அத்தனை பேரும் திமுகவில் இணைந்து விடலாம் என்றுதான் கூறியிரந்தனர்.
ஆனால் தற்போது அவர்களில் பலரும் திமுகவில் இணைய மறுத்து வருகின்றனராம்.
இதனால் கண்ணப்பன் தனது ஆதரவாளர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று பேசி திமுகவில் இணையுமாறு கேட்டு வருகிறாராம். அவர் மட்டுமன்றி, கண்ணப்பனின் மனைவி, மகள், மகன், மருமகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவில் இருந்து மதிமுகவில் சேர்ந்தபோது 17 ஒன்றிய செயலாளர்களுடன் வந்தார். அதில் பாதி பேரையாவது திருப்பி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்போடு உள்ளார். ஒன்றிய செயலாளர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களும் தரப்படுகின்றன.
கண்ணப்பன் சென்னை சென்று திமுகவில் சேரும் நிகழ்ச்சிக்காக ஆட்களைத் திரட்டும் வேலையில் கோவை மாவட்ட திமுகவினரும் இறங்கியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட வாகனங்களை திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனராம்.
இதற்கிடையே போட்டி மதிமுக நடத்தி வந்த எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் இன்று திமுகவில் இணைகின்றனர். இவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தான் ஆள் பிடித்துக் கொண்டு திமுகவுக்குத் திரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications