காங்கிரசுக்கு எதிராக எஸ்எம்எஸ் பிரச்சாரம்!
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஞாயிறுக்கிழமை சென்னையில் இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோ.ராஜாராம் தலைமை தாங்கினார்.
தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெறும் கையெழுத்து இயக்கத்திற்கும், சேலம் இன எழுச்சி மாநாட்டிற்கும் உதவிகள் செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத் தமிழர்களைக் கொல்வதற்காக இலங்கை அரசுக்கு ஆய்த உதவிகள் செய்த காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக குறுஞ்செய்தி தகவல் மையம் (SMS service) அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் குறுஞ்செய்தி தகவல் மையத்தில் சந்தாதாரர்கள் ஆக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டியவர்களின் கைபேசி எண்ணுக்கு காங்கிரசுக்கு எதிரான தகவல்கள், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காங்கரசைப் பற்றிக் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், ஈழத்தமிழர் ஆதரவு போராட்டச் செய்திகள், ஈழப் போர் குறித்த இணையதள செய்திகள் என பல செய்திகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
இதில் திரட்டப்படும் நிதி பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும். இதில் இணைய விரும்பும் தமிழ் உணர்வாளர்கள், 9841949462 மற்றும் 9894310997 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.