For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம்: அத்வானி

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள அனைத்து 18 வயது நிரம்பிய பெண்களுக்கும் தலா ரூ. 1லட்சம் தருவோம் என பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி அறிவித்துள்ளார்.

இது தேர்தல் காலம். ஆளாளுக்கு வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி அள்ளி விடுவார்கள். அந்த வகையில், பாஜகவும் ஏகப்பட்ட வாக்குறுதிகளை எடுத்து விட்ட வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தனது பிளாக்கில் அத்வானி அதிரடியான வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ..

பாஜக தலைமையில் அடுத்த ஆட்சி அமைந்தால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் லட்சாதிபதி ஆக்குவோம் என உறுதி அளிக்கிறேன். 18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

இதற்காக லட்லி லட்சுமி யோஜனா என்ற திட்டம் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வரப்படும். இந்தத் திட்டம் ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் பாஜக அரசால் கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

குறுகிய காலத்தில், இது மிக மிக வெற்றிகரமான சமூக நலத் திட்டமாக மாறி, வரலாறு படைத்தது.

மத்திய பிரதேசத்தில் உள்ள திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வீதம், சேமிப்பு பத்திரங்களை அரசே வாங்கி வழங்கும்.

அந்தக் குழந்தை ஐந்தாவது படித்து முடிக்கும்போது ரூ. 2000 கிடைக்கும். 8வது முடிக்கும்போது ரூ. 4000 கிடைக்கும். பத்தாவது முடிக்கும்போது ரூ. 7500 கிடைக்கும். அதன்பின்னர் 11வது படிக்கும்போது மாதந்தோறும் ரூ. 200 கிடைக்கும். 12வது முடிக்கும்போது அல்லது 18 வயதை எட்டும்போது அக்குழந்தைக்கு மொத்தமாக ரூ. 1 லட்சத்து18 ஆயிரம் கையில் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, யாருமே குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்பதுதான். ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி, நல்ல படிப்பைத் தருவது என்பது பெற்றோரின் கடமை மட்டுமல்ல, அரசின் கடமையும் ஆகும். அதைக் கருத்தில் கொண்டே மத்தியப் பிரதேசத்தில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு வெற்றியும் பெற்றது.

பெண் சிசுக்களைக் கொல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க விழிப்புணர்வுப் பிரசாரம் தீவிரமாக செய்யப்பட வேண்டும். பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றால், பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற பிரசாரத்தை நானே முன்னின்று நடத்துவேன் என்று கூறியுள்ளார் அத்வானி.

இந்தியாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 71.4 கோடியாகும். அதில் பெண்களின் ஓட்டுக்கள் மட்டும் 34 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு திரும்பும் உமாபாரதி:

இதற்கிடையே சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த பாரதீய ஜனசக்தி கட்சியின் தலைவர் உமாபாரதி அத்வானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் பிரதமராக ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் ராஜ்நாந் சிங் மூலம் அத்வானிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் நான் உங்கள் மகளைப் போன்றவள் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து உமா பாரதி கூறுகையில், தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற எண்ணத்தில் நான் அத்வானிக்கு ஆதரவு கடிதம் அனுப்பவில்லை என்றார்.

ஆனால் அவர் மீண்டும் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X