Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்.ஜி., செஞ்சி, கண்ணப்பன் என இணைப்பு விழாக்கள் தொடரும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

L Ganesan, Chenji Ramachandran and Karunanidhi
சென்னை: இன்றைக்கு எல்.ஜி, செஞ்சி ஆகியோரின் இணைப்பு விழா நடைபெற்றிருக்கின்றது. இந்த இணைப்பு விழா தொடரும் என்பதற்கு அடையாளமாகத் தான் அடுத்து தம்பி கண்ணப்பன் வந்து இணைகின்ற விழா சென்னையில் நடைபெறவுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் நேற்று முறைப்படி திமுகவில் இணைந்தனர்.

அவர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, தங்களது ஆதரவாளர்களுடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

விழாவில், அமைச்சர்கள் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிமுகவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைவதாக 50 ஆயிரம் உறுப்பினர்கள் கையெழுத்து போட்ட படிவத்தினை எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கருணாநிதியிடம் வழங்கினர். கருணாநிதி அவர்கள் இரண்டு பேருக்கும் தி.மு.க. கரை வேஷ்டியை வழங்கினார்.

விழாவில் கருணாநிதி பேசுகையில், "பிரிந்தோர் கூடினால் பேசவும் வேண்டுமோ'' என்ற கேள்விக்கு இணங்க பேசாமலே உங்களை எல்லாம் பார்த்து மகிழ்ந்து பரவசம் கொண்டு இந்நாள் எழுகின்ற எழுச்சியும், மகிழ்ச்சியும் என்றென்றும் நிலைத்து நீடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பி செஞ்சி ராமச்சந்திரனுடைய மகனுக்கு நடைபெற்ற திருமண விழாவிலே தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்துகின்ற வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். அந்த விழாவிலே பேசும்போதும் - அதைத் தொடர்ந்து சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற "பொடா'' சட்ட எதிர்ப்பு நிகழ்ச்சியிலே பேசும் போதும் - ஒரு கருத்தைச் சொன்னேன்.

என்ன கருத்து என்றால் - ஏதோவொரு சூழ்நிலையில் - தி.மு.க.வில் இருந்து நீங்கள் எல்லாம் பிரிய நேரிட்டு - தி.மு.க. - ம.தி.மு.க. என்கின்ற இரு இயக்கங்களாக நாம் பிரிந்து இன்றைக்கு தமிழகத்திலே பணியாற்றி வருகிறோம்.


மறுபடியும் நாம் இணைந்து - நாம் கொண்டிருக்கின்ற ஒரே லட்சியத்திற்காக பணியாற்றுகின்ற வாய்ப்பு கிடைக்காதா - ஏற்படாதா என்ற எண்ணம் எனக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருந்து கொண்டேயிருக்கின்றது என்று கூறினேன்.

இணைந்தவர்களை நம்முடைய பேராசிரியர் குறிப்பிட்டதைப் போல - திருவிழாவிலே காணாமல் போன பிள்ளைகள் என்று சொல்ல மாட்டேன் - காரிருளில் கடத்தப்பட்ட பிள்ளைகள் - அந்தப் பிள்ளைகளை தமிழகத்திலே நாம் மீண்டும் நம்முடைய லட்சியத்தைப் பரவலாக ஆக்க - நம்முடைய கொள்கைகளுக்கு வெற்றி தேட - நம்மோடு இன்றைக்கு சேர்த்தணைத்து, சிரித்து மகிழ்ந்து - கலைவாணர் அரங்கத்தில் களிப்பு மிகக் கொண்டு இந்த விழாவிலே பங்கேற்றிருக்கிறோம்.

தொடக்கத்திலே "நலம் தானா? நலம் தானா?'' என்ற ஒரு பாட்டை ஒரு தம்பி இங்கே பாடினார். நலம் தான். தமிழ் நாட்டு மக்கள் அத்தனை பேரையும் பார்த்து - நலம் தானா என்று நாம் கேட்டு - நலம் தான் என்று அவர்கள் சொல்லும்போது ஏற்படுகின்ற அந்த மகிழ்ச்சி - தனி ஒரு கருணாநிதி நலமாக இருந்தால் என்ன, இல்லா விட்டால் என்ன?.

என்னுடைய உடல் நிலையிலே ஏற்பட்ட அதிர்ச்சிமிக்க - அய்யப்பாட்டிற்குரிய நிலையில் - ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்று - இன்னும் முழு குணம் அடையாத சூழ்நிலையில் - இந்த நாட்களில் உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இதிலே கூட இந்தத் தேதி இன்றைக்கு உங்களுக்காக - நீங்கள் இணைவதற்காக குறிக்கப்பட்டு - இதிலே கூட ஒரு போட்டி - 23-ம் தேதி தம்பி கண்ணப்பன் தலைமையில் உங்களுக்குப் போட்டியாக ஒரு விழா, இணைப்பு விழா நடைபெறவிருக்கின்றது.

பொதுவாக கலைவாணர் அரங்கமானாலும், கலைஞர் அரங்கமானாலும் நிரம்ப மண விழாக்கள் நடைபெறுவதுண்டு. அவைகளும் இணைப்பு விழாக்கள் தான். அதைப் போல இன்றைக்கு இந்த இணைப்பு விழா நடைபெற்றிருக்கின்றது. இந்த இணைப்பு விழா தொடரும் என்பதற்கு அடையாளமாகத் தான் அடுத்து தம்பி கண்ணப்பன் வந்து இணைகின்ற விழா சென்னையில் நடைபெறவிருக்கிறது.

கோவை, தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு இப்படி பல மாவட்டங்களிலிருந்து அந்தக் கட்சியிலே உள்ளவர்கள் தி.மு.கழகத்திலே வந்து இணைகிறீர்கள் என்றால், நாம் மேலும் மேலும் பல வெற்றிகளை அடைய - பல லட்சியங்களில், குறிக்கோளில், நாம் எடுத்த காரியத்தில் வெற்றிக் கொடி நாட்ட - இந்த நிகழ்ச்சிகள் நிச்சயமாக பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

உங்களை எல்லாம் வருக, வருக என்று அழைக்கிறேன், வாரி அணைத்து மகிழ்கின்றேன். தமிழகத்தில் தி.மு.கழகத்தின் வரலாற்றில் மொழிப்போர் ஒரு முக்கியமான அத்தியாயம். அந்த மொழிப் போர் தளகர்த்தர்களாக இருந்தவர்களில் இருவர் - இங்கே. அவர்கள் தலைமையில் - அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட ஒரு இயக்கத்தை - இந்த இயக்கத்தோடு இன்றைக்கு இணைக்கின்றார்கள்.

மொழிப் போர் தளகர்த்தராகத் திகழ்ந்த தம்பி எல்.ஜி.யையும், அதே போல மற்றொரு தளகர்த்தராகத் திகழ்ந்த தம்பி செஞ்சி ராமச்சந்திரனையும் நான் என்னுடைய இதயத்தால் ஏந்திக் கொள்கிறேன் என்னுடைய கரங்களால் தழுவிக் கொள்கிறேன். வருக வருக - வாழ்க - உங்களுடைய வலிவையும் சேர்த்து இந்தத் திராவிட இயக்கத்தின் - புதுப் பொலிவுகாண, புது வலிவுகாண - பயன்படுக, பயன்படுக என்று கூறி, அவர்களையெல்லாம் இந்த இணைப்பு விழாவிலே இங்கே ஆயிரக்கணக்கில் கூடியுள்ள உங்களுடைய அன்பான உள்ளங்களிலிருந்து கிளம்புகின்ற வாழ்த்துகளோடு நானும் என்னுடைய வாழ்த்தை இணைத்து வரவேற்கின்றேன் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+