சவுதியில் 9 பேருக்கு வாழ்வு தந்த இந்தியர்
துபாய்: சவுதி அரேபியாவில் மூளைச்சாவு கண்ட இந்தியரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டு 9 பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது. இது உடல் தானம் கொடுக்க தயங்கி வரும் சவுதி அரோபிய குடும்பங்களுக்கு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண தலைநகரான தம்மாமில் மன்னர் பக்த் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருக்கிறது. இங்கு சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கான மையம் ஒன்று துவக்கப்பட்டது. ஆனால், இங்கு யாரும் இதுவரை உடல் உறுப்பு தானம் செய்யவில்லை.
இது குறித்து அந்த மைய தலைவர் ரஷித் அல்-ஹூபைல் கூறுகையில், நாங்கள் இந்த மையத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை யாரும் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வரவில்லை. சவுதி அரேபிய குடும்பத்தினரை இவ்விஷயத்தில் மனமாற்றம் செய்வது சற்று கடினமாக இருக்கிறது என்றார்.
இந்நிலையில் ரியாத் நகரில் மூளைச்சாவு அடைந்த இந்தியர் ஒருவரது உடல் உறுப்புகள் 9 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவரின் பெயர் மற்றும் என்ன உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டது போன்றவை வெளியிடபடவில்லை.
ஆனால், அவரது உடல் உறுப்புகளின் மூலம் 9 பேருக்கு புது வாழ்க்கை அளிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த இந்தியரின் நுரையீரலை தானமாக பெற்ற பெண்ணின் கணவர் அலி அல்-அவுபி கூறுகையில்,
எனது மனைவி கடந்த 8 ஆண்டுகளாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். ஒரு மாதத்துக்கு முன்னர் டாக்டர்கள் அவருக்கு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால், யாரும் தானம் தர முன்வரவில்லை. இதனால் அறுவை சிகிச்சை காலதாமதமாகி கொண்டிருந்தது. மூளைசாவு அடைந்த இந்தியர் ஒருவரி்ன் நுரையீரல் எனது மனைவிக்கு தானம் கொடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.