குன்னூரில் ராணுவ வீரர் குடிபோதையில் ரகளை
குன்னூர்: குன்னூர் வண்டிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு சுமார் 7.20 மணி அளவில் ஒருவர் நன்றாக குடித்துவிட்டு தள்ளாடி கொண்டிருந்தார்.
அந்த வழியாக வருவோர்கள் மீது கற்களை வீசி எறிந்து ரகளை செய்தார். அருகிலிருந்த கடைக்கு சென்று தொலைபேசியில் பேச வேண்டும் என கூறி அதை கீழே போட்டு உடைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல தெரிவித்தனர்.
போதையில் சுயநினைவு மங்கிய நிலையில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அங்கே நின்று கொண்டிருந்த சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் அவரை தாக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு போலீசார் பொது மக்களை தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காத அவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தான் இந்திய ராணுவ கப்பல் அதிகாரி என்றும், தான் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ராணுவ முகாமுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் ராணுவ வாகனத்தில் அழைத்து செல்லப்ப்டடார்.