மனித நேயக் கட்சிக்கு ராமநாதபுரம்?-உதயசூரியனில் போட்டி?
சென்னை: திமுக அணியில் இடம் பெற்றுள்ள மனித நேயக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அக்கட்சியின் வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கோரலாம் னவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சிதான் மனித நேயக் கட்சி. சமீபத்தில் தாம்பரத்தில் நடந்த பிரமாண்ட மாநாட்டின்போது மனித நேயக் கட்சி உதயமானது.
இக்கட்சி திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்து அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தங்களது கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக அக்கட்சி ஏற்கனவே கூறியுள்ளது.
இந் நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மனித நேயக் கட்சி நிர்வாகிகள், திமுக தேர்தல் தொகுதிப் பங்கீடு அணியின் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் ஒரு தொகுதி தருவதாக திமுக தரப்பு தெரிவித்துள்ளது. இதை மனித நேயக் கட்சி ஏற்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து பேச்சு நடக்கவுளளது.
அனேகமாக அக்கட்சிக்கு ராமநாதபுரம் ஒதுக்கப்படலாம். மேலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறும் கோரப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை அந்தக் கட்சி ஏற்குமா என்று தெரியவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் வேலூர் தொகுதியில் காதர் மொஹைதீன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.