ரம்பத்தால் கழுத்தை அறுத்து பெண் கொலை
கோவை: திருப்பூர் அருகே பெண்ணை அவளது கள்ளக் காதலன் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள வேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி (37). இவர்களுக்கு கார்த்திகேயன் (18), சந்தோஷ்குமார் (16), பவித்ரா (14) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டுக்கு பக்கத்தில் திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலே மனைவியை இழந்த அழகிரி என்ற எலக்ட்ரிசியன் வசித்து வருகிறார். ஈஸ்வரிக்கும் இருவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கள்ளத் தொடர்பு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு கள்ளக் காதலன் வீட்டிலே நிரந்தரமாக தங்கிவிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரியின் கணவர் சுப்பிரமணி இறந்து போக இவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சேலம் சென்று சந்தோஷமாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் காலப்போக்கில் சண்டையாக மாறியது. இதையடுத்து தனது மகன்கள், மகளுடன் பொங்கலூர் வேலம்பட்டி புதூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ஈஸ்வரி வந்து விட்டார். பின்னர் ஈஸ்வரி கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
ஈஸ்வரி இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட அழகிரி வேலம்பட்டி புதூருக்கு வந்தார். அப்போது வேலைக்கு சென்று கொண்டிருந்த ஈஸ்வரியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், ஈஸ்வரி மறுத்துவி்ட்டார். இதையடுத்து அழகிரி தான் வைத்திருந்த ரம்பத்தால் ஈஸ்வரியை வெட்டினார். தப்பி ஓட முயன்ற ஈஸ்வரியை விரட்டி பிடித்து ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றார்.
இதையடுத்து பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி அழகிரியை கைது செய்தனர்.