இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பி.வி.நாயக் நியமனம்
டெல்லி: இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
போர் விமான விமானியாக பணியாற்றியவர் நாயக். தற்போதைய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பாலி ஹோமி மேஜர் மே 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தளபதியாக நாயக் பதவியேற்கவுள்ளார்.
மிக் 21 ரக விமானங்கள், மிக் 23 பிஎன் ரக விமானங்களை செலுத்திய அனுபவம் உடையவர் நாயக். கிட்டத்தட்ட 3085 மணி நேரங்கள் இந்த விமானங்களை செலுத்திய அனுபவம் படைத்தவர்.
தற்போதைய தளபதி மேஜர், ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்தவர். ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்தவரை விமானப்படைத் தளபதியாக நியமிப்பதா என்று அப்போது சர்ச்சையும் எழுந்தது. இந்த நிலையில் புதிய தளபதி போர் விமான பைலட் என்பது குறிப்பிடத்தக்கது.
1969ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார் நாயக். 40 வருட காலமாக பல்வேறு பிராந்தியங்களில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். 1971ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரிலும் நாயக் பங்கேற்றுள்ளார்.
பரம் விசிஷ்ட் சேவா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை நாயக் பெற்றுள்ளார்.