சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 16 இந்தியர்கள் விடுதலை
டெல்லி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிக்கப்பட்டு விட்டது. அதிலிருந்த 16 இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயிலிருந்து மொகாதிஷுவுக்கு அல் ரபீக் என்ற சரக்குக் கப்பல் வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் 16 இந்தியர்கள் இருந்தனர்.
நேற்று காலை இந்திய நேரப்படி 10.30 மணிக்கு இந்தக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
கப்பலில் அரிசி, ரீபைன்ட் எண்ணை, கோதுமை மற்றும் பிற சரக்குகள் இருந்தன.
கடத்தல் குறித்து இந்திய கடற்படைக்குத் தகவல் போனது. இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியக் கடற்படை போர்க் கப்பல் தேடுதல் வேட்டையில் இறங்கியது.
இந்த நிலையில் நேற்று மாலையில் கப்பலை கொள்ளையர்கள் விடுவித்து விட்டனர். ஆனால் அதற்கு முன்பாக கப்பலில் இருந்த பொருட்களின் ஒரு பகுதியை அவர்கள் திருடிக் கொண்டனர். கப்பலின் எரிபொருளையும் திருடி விட்டனர். ஊழியர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.
கப்பலில் இருந்த 16 இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவின் பன்ட்லேண்ட் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 1500 கொள்ளையர்கள் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் இவர்கள் 150க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கடத்தி அட்டூழியம் செய்துள்ளனர். பல கோடி பணத்தையும் இவர்கள் பறித்துள்ளனர்.
சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்திலிருந்து தங்களது நாட்டு கப்பல்களைக் காப்பாற்ற இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏடன் வளைகுடா பகுதியில் போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications