சமத்துவ மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் நீக்கம்
மதுரை: கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் மருது அழகுராஜ்.
ஆரம்ப கால கட்டத்தில், தேமுதிக -வில் கலை இலக்கிய அணி மாநில துணைச் செயலாளராக பதவி வகித்த மருது அழகுராஜ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இணைத்தார்.
இதனையடுத்து, சமத்துவ மக்கள் கட்சியில் மருது அழகுராஜிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மருது அழகுராஜ் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு நடந்து கொண்டதாக கட்சி தலைவர் சரத்குமாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து அ.இ.ம.க. தலைவர் சரத்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் மருதுஅழகுராஜ் கட்சி கட்டுப்பாட்டை மீறியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கட்சித் தலைவர் சரத்குமார் உத்தரவின் பேரில் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கட்சி வளர்ச்சிப் பணியில் முறையாக செயல்படாததால் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக பதவி வகித்த மருது அழகுராஜ் கட்சியின் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் 20-3-2009 முதல் விடுவிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications