For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக குறித்து எனக்குத் தெரியாதே - மு.க.அழகிரி

By Sridhar L
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நான் மதுரையிலிருந்து அரசியல் நடத்தி வருகிறேன். எனக்கு பாமக குறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் தென் மாவட்ட திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி.

தென் மாவட்டங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்காக தீவிர பணிகளில் இறங்கியுள்ளார் மு.க.அழகிரி.

இதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் அவர் நேரில் செல்லத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், நாகர்கோவிலில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி திமுகவுக்கே..

அங்கு அவர் கூட்டத்தில் பேசுகையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை திமுகவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்று தொண்டர்கள் அன்புக் கட்டளையிட்டுள்ளனர். உங்களுக்கு உள்ள ஆசை எனக்கும் இருக்கிறது.

அதனால், முதல்வர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்குமாறு மன்றாடி கேட்டுக்கொள்வேன்.

நான் இந்த பொறுப்புக்கு வருவதற்கு நீங்கள்தான் காரணம். 40 ஆண்டுகளாக திமுகவுக்கும், மக்களுக்கும் பணியாற்றினேன். திருமங்கலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

1,500 பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகை வாங்கி தந்துள்ளோம். 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. சொன்னதை செய்வோம் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஜெயிக்க வைத்ததுபோல், மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

அதுவும் லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டும். அந்த பெருமையை எனக்குப் பெற்றுத்தர வேண்டும். அதற்காக இப்போதிருந்தே உழைக்க வேண்டும் என்றார் அழகிரி.

பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி பேசுகையில், பாமக கூட்டணிக்கு வருமா என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அழகிரி, நான் மதுரையில் இருந்து அரசியல் நடத்துகிறேன். எனக்கு பாமக குறித்தெல்லாம் தெரியாது என்றார் அவர்.

தொண்டர்கள் தள்ளுமுள்ளு...

முன்னதாக மு.க.அழகிரியை வரவேற்கத் திரண்டிருந்த திமுகவினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அவரை வரவேற்க திமுகவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சிக்காக மேடையும் அமைக்கப்பட்டிருந்தது.

காலை 11.30 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 10 மணியிலிருந்தே ஆரல்வாய்மொழி சந்திப்பில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டனர்.

குறிப்பிட்ட நேரத்துக்கு அழகிரி வரவில்லை. காலை 11.30 மணியளவில் மேடையின் அருகே திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு நின்றதுடன், அழகிரியை வரவேற்பதிலும் போட்டாபோட்டி இருந்தது. அப்போது திடீரென மோதல் ஏற்பட்டது.

திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைகலப்பில் ஈடுபட்டதுடன், ஒருவரையொருவர் சட்டையைப் பிடித்து இழுத்து, தள்ளிவிட்டனர். மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சுரேஷ் ராஜன் முன்னிலையில் இந்த மோதல், தள்ளுமுள்ளு நடந்தது.

பின்னர் அமைச்சரும், போலீஸாரும் தலையிட்டு தொண்டர்களை அமைதிப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X