நான் பாகிஸ்தானிதான் - நீதிபதியிடம் கஸாப் ஒப்புதல்

இந்தியாவின் மீது போர் தொடுத்தது, கொலை, கொலை முயற்சி, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குள் டிக்கெட் எடுக்காமல் சென்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கஸாப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கஸாப்புக்கு எதிராக 5000 பக்கங்களைக் கொண்ட ஆதாரங்களையும் போலீஸார் தயாரித்துள்ளனர்.
இந்த பின்னணியில் இன்று கஸாப்பிடம் சிறப்பு நீதிபதி தஹிலியானி விசாரணையை மேற்கொண்டார். ஆர்தர் சாலை சிறையிலிருந்தபடி கஸாப்பிடம் செஷன்ஸ் நீதிபதி தஹிலியானி செஷன்ஸ் கோர்ட்டில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தினார்.
அப்போது, தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்றும், தனக்கு வக்கீல் அமர்த்திக் கொள்ள உதவ வேண்டும் என்றும் கஸாப் கோரிக்கை விடுத்தான்.
இதுகுறித்து மும்பை காவல்துறை அதிகாரி ராகேஷ் மரியா கூறுகையில், தான் பாகிஸ்தானிதான் என்பதை கஸாப் ஒத்துக் கொண்டான். மேலும், சட்ட உதவி தேவை என்றும் கேட்டான்.
கோர்ட் அமர்த்தும் வக்கீலை ஏற்றுக் கொள்வதாகவும் அவன் கூறினான். இன்றைய விசாரணை அத்துடன் முடிந்தது. அடுத்த விசாரணை தேதி விரைவில் தெரிய வரும் என்றார்.
விசாரணைக்காக சிறை வளாகத்தில் தனி அறைக்கு கஸாப் கொண்டு வரப்பட்டான். தாடியுடன் காணப்பட்ட கஸாப், கிரே நிறத்திலான டீசர்ட் அணிந்திருந்தான்.
விசாரணை தொடங்கியதும், நீதிபதி, கஸாப்பிடம், என்னை யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். அதற்கு கஸாப், தெரியவில்லை என்றான். இதையடுத்து நீதிபதி, நான்தான் இந்த வழக்கை நடத்தப் போகும் நீதிபதி என்றார். இதையடுத்து நீதிபதியைப் பார்த்து கஸாப் நமஸ்தே என்று வணக்கம் தெரிவித்தான்.
பின்னர் உனக்கென்று வக்கீல்கள் யாரும் இல்லை என்ற நீதிபதி, வக்கீலை அமர்த்திக் கொள்ள விருப்பமா என்று கேட்டார். அதற்கு கஸாப், கோர்ட் உத்தரவிடும் வக்கீலை வைத்துக் கொள்ள சம்மதம் என்றான்.
பின்னர் கஸாப்பின் பெயர், ஊர், நாடு போன்ற விவரங்களை நீதிபதி கேட்டார். அதற்கு கஸாப், நான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் பகுதியைச் சேர்ந்தவன் என்றான் கஸாப்.
குற்றப்பத்திரிக்கை நகல் கிடைத்ததா என்று நீதிபதி கேட்டபோது, கிடைத்தது என்றான் கஸாப்.
விசாரணையின்போது இந்தியிலேயே பேசினான் கஸாப். விசாரணை முடிந்துதம் அவனை மீண்டும் அவனது அறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் கஸாப் உள்பட 38 பேர் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
11 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2200 சாட்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
கஸாப் தவிர லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் முகம்மது சயீத், லஷ்கர் அமைப்பின் ஜாகி உர் ரஹ்மான் லக்வி, சரார் ஷா ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற முக்கிய நபர்கள்.
விசாரணையின்போது பத்திரிக்கையாளர்கள் அதைப் பார்க்க முதல் முறையாக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது ஆர்தர் சாலை சிறை வளாகத்திற்குள்ளேயே சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் முழுமை அடையவில்லை. இதனால்தான் செஷன்ஸ் கோர்ட்டிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங்கில் இன்றைய விசாரணை நடந்தது.
கோர்ட்டை முழுமையாக தயார் செய்வதற்கு வசதியாக ஏப்ரல் 13ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இன்று மாலை தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இன்றைய விசாரணையின்போது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications