3 தொகுதிகளில் போட்டியிடுகிறேன் - கார்த்திக் அறிவிப்பு
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.
விருதுநகருக்கு வந்த கார்த்திக், அங்கு நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். கூட்டணி கட்சிகளுக்காக கொள்கையை விட்டுத் தர மாட்டேன்.
சுயமரியாதை கொண்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் உள்பட 3 தொகுதிகளில் போட்டியிடுவேன். தேர்தலில் தனியாக போட்டியிடவும் தயங்க மாட்டேன்.
மூன்றாவது அணி என்பது ஒரு ஏமாற்று அணி. நாட்டில் கடும் விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் ...
கார்த்திக் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது கட்சித் தொண்டர்களுக்கிடையே திடீரென மோதல் வெடித்தது. இதையடுத்து கார்த்திக் தனது பேச்சை பாதியில் நிறுத்ித விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்களை ஏற்றுக் கொள்ள முன்வராததால், சரத்குமார், கார்த்திக் ஆகியோருடன் பாஜக பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.