ஒரு மாதத்திற்குப் பின்னர் பணிக்குத் திரும்பினர் வக்கீல்கள்
சென்னை: கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் இன்று முதல் பணிக்குத் திரும்பினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் மோதலைத் தொடர்ந்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நீதிமன்றப் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில், சென்னை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது.
இதை வக்கீல்கள் வரவேற்றனர். மேலும், தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிடுவதாகவும், திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்புவதாகவும் அறிவித்தனர்.
அதன்படி இன்று காலை வக்கீல்கள் பணிக்குத் திரும்பினர். சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் பிற நீதிமன்றங்களில் இன்று காலை வக்கீல்கள் பணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து இயல்பு நிலை திரும்பியது.
சட்டக் கல்லூரிகளும் திறப்பு:
அதேபோல கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த தமிழக சட்டக் கல்லூரிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்குச் சென்றனர். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் பலவகையான போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரிகள் மூடப்பட்டன.
50 நாட்களாக வகுப்புகள் நடைபெறாததால், மே மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications