மசூதியை இடித்தார், குஜராத் கலவரத்திற்குத் தலைமை தாங்கினார்- அத்வானி மீது மன்மோகன் பாய்ச்சல்

டெல்லியில் இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய மன்மோகன் சிங் அத்வானியை கடுமையாக சாடினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு நாள் கூலி ரூ. 100 ஆக அதிகரிக்கப்படும்.
கிலோ அரிசி- கோதுமை ரூ. 3:
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் கிலோ ரூ.3 என்ற விலையில் மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ள வருண் காந்தியை பாஜக ஆதரிப்பது அவமானகரமானது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானி என்னை பலவீனமானவர் என்று கூறுகிறார். அவர் என்ன செய்து விட்டார் இந்த நாட்டுக்கு?. ஏதாவது நல்லது செய்திருக்கிறாரா?.
பாபர் மசூதியை இடித்ததில் முக்கியப் பங்காற்றினார். குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்குத் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சராக இருந்தபோது, நாடாளுமன்றம் மற்றும் செங்கோட்டை மீதான தீவிரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறினார்.
நாட்டுக்கு யார் தலைமை தாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது வாக்காளர்கள்தான், அத்வானி அல்ல.
பாகிஸ்தானுக்குப் போயிருந்தபோது பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவை புகழ்ந்து பேசி தனது சந்தர்ப்பவாத புத்தியை வெளிப்படுத்தியவர் அத்வானி.
இவ்வாறு பேசி விட்டு திரும்பி வந்த பின்னர் அவரது கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் விமர்சித்ததை நாடு மறக்கவில்லை. அதற்கு அத்வானி மழுப்பியதையும் நாடு மறக்கவில்லை. எனவே அத்வானி பலமானவரா அல்லது உறுதியானவரா என்பதை மக்கள் சொல்வார்கள்.
நான் பலவீனமானவோ அல்லது உறுதியானவனோ அது பிரச்சினை இல்லை. எனது அரசின் நடவடிக்கைகள் எனது செயல்பாட்டை விளக்கும், அது பேசும், நான் பேசத் தேவையில்லை.
எனது செயல்பாட்டைப் பேசுகிறாரே அத்வானி, காந்தஹாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தபோது எப்படி செயல்பட்டார் என்பதை நாடே அறியும்.
தீவிரவாதிகளின் மிரட்டலுக்குப் பயந்து 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவித்தார் அத்வானி.
உள்துறை அமைச்சராக இருந்தபோது அத்வானியின் செயல்பாடுகளை நாடு அறியும். இவர் (அத்வானி) பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவரா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்.
நாடாளுமன்றம் தாக்கப்பட்ட பின்னர் நாட்டின் எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக படைகளைக் குவித்து வைத்துக் கொண்டு, பின்னர் எந்தக் காரணமும் சொல்லாமல் படைகளை விலக்கிக் கொண்டார் அத்வானி. இதனால் நாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
பாஜகவும் சரி, இடதுசாரிகளும் சரி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லமுடியாதவை. இரு தரப்புக்கும் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கிடையாது.
நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களை சந்திக்கும் தகுதியும், திறமையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் கிடையாது, மூன்றாவது அணிக்கும் கிடையாது.
மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பான ஆட்சியை அளிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தரக் கூடிய அருமையான சந்தர்ப்பம், வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம், வாக்காளர்களுக்குக் கிடைத்துள்ளது.
உறுதியான, வலிமையான, குறிக்கோளுடன் கூடிய அரசு அமைந்தால், தெற்காசியாவில் மேலும் வலுப்பெற்ற வல்லரசாக இந்தியா மாறும். இன்னும் பல வளர்ச்சிகளை இந்தியா பெற முடியும்.
இந்தியாவைச் சுற்றிலும் இன்று நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. இது வருத்தம் தருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது. நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகியவற்றிலும் பிரச்சினைகள் உள்ளன.
இதன் காரணமாக, தெற்காசியாவில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகளால், தெற்காசியாவின் எதிர்காலம் பெரும் கவலைக்குரியதாக உள்ளது.
காங்கிரஸ் ஏன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தலைவர் சோனியா காந்தி தெளிவாக விளக்கியுள்ளார். அரசின் வளர்ச்சித் திட்டங்கள் நலிவடைந்த, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின சமூகத்தினர் அனைவருக்கும் முறையாக போய்ச் சேர்ந்துள்ளது.
சோனியா காந்தியின் தலைமையின் கீழ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஓய்வின்றி உவைத்து வருகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் சொல்லப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications