வருண் மீது தவறில்லை-பாஜக: முழு ஆதரவு
டெல்லி: வருண்காந்தி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடக்கிறது. அவருக்காக நான் தீவிரப் பிரசாரம் செய்வேன் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
வருண் காந்தி விவகாரத்தில் பாஜக ஆரம்பத்தில் பெருத்த அமைதி காத்தது. வருண் காந்தியின் விஷமப் பேச்சு தொடர்பாக பாஜக தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது.
இந்த நிலையில் தற்போது பாஜக முழுவதுமாக வருணுக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தேர்தல் ஆணையம், வருண் காந்தியை தேர்தலில் நிறுத்தக் கூடாது என பிறப்பித்த அறிவுரையை நேற்று பாஜக முழுமையாக நிராகரித்தது.
இந்த நிலையில், வருண் காந்திக்கு ராஜ்நாத் சிங் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், வருண் காந்திதான் எங்களது பிலிபித் தொகுதி வேட்பாளர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் வருணுக்காக தீவிரப் பிரசாரம் செய்வேன்.
தேர்தல் ஆணையம் குறிப்பாக ஆணையர் நவீன் சாவ்லா திட்டமிட்டு வருணுக்கு எதிராக செயல்படுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தூண்டுதலின் பேரிலேயே வருணுக்கு எதிராக நவீன் சாவ்லா சதி செய்கிறார் என்றார் ராஜ்நாத் சிங்.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், வருண் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ் இதுகுறித்துக் கூறுகையில், வருண் காந்தியின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று வர்ணித்துள்ளார்.
ஆனால் ஐக்கிய ஜனதாதளத்தின் எதிர்ப்பை பாஜக பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
வருண் காந்தியின் பேச்சை முழுமையாக ஆதரித்துள்ளதன் மூலம் கிடப்பில் போட்டிருந்த இந்துத்வா கொள்கையை பாஜக தூசு தட்டி எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.