மன்மோகனுக்கு அருகதை இல்லை-பாஜக பதிலடி
டெல்லி: நாட்டுக்கு பாஜக என்ன செய்தது என்ற கேட்கவும், பாஜகவின் வலிமை குறித்தும் பேச பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எந்தவித அருகதையும் கிடையாது என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், எந்த உரிமையில் பாஜகவின் தார்மீக நெறிகள் குறித்தும், கட்சியின் தன்மை குறித்தும் பேசுகிறார் மன்மோகன் சிங்.
அவருடைய அமைச்சரவையிலேயே ஏகப்பட்ட கிரிமினல் ஆட்கள் இருக்கிறார்கள். இது ஒரு கிரிமினல்மயமான அரசு. அவரது அமைச்சர்கள் எத்தனை பேர் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்பதை நான் சொல்ல ஆரம்பிக்கட்டுமா.
அடிப்படையில் மன்மோகன் சிங் அரசியல்வாதியே கிடையாது. எனவே மன்மோகன் சிங்கிடமிருந்து இந்த மாதிரியான அரசியல் கேள்விகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
லோக்சபா தேர்தலில் போட்டியிடக் கூட தைரியம் இல்லாத மன்மோகன் சிங், பாஜக குறித்தும், அதன் பிரச்சினைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் பேச எந்த தகுதியும், அருகதையும், உரிமையும் கிடையாது.
அத்வானி குறித்து பேச மன்மோகன் சிங்குக்கு எந்த உரிமையும் இல்லை. அத்வானியின் சாதனைகளுக்கு முன்பு நிற்கக் கூட தகுதியில்லாதவர் மன்மோகன் சிங். திடீரென பிரதமரானவர்தான் மன்மோகன் சிங். அவர் பிரதமானதே ஒரு விபத்து. மும்பையிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறும், நடைபெற்ற சம்பவங்களை வைத்தே இவரைப் புரிந்து கொள்ள முடியும் என்றார் பிரசாத்.












Click it and Unblock the Notifications