கூட்டணி அமையாவிட்டால் தனித்துப் போட்டி-கார்த்திக்
மதுரை: நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் எங்கள் கட்சி 14 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கூட்டணி குறி்த்து மதுரையில் அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மற்ற கட்சிகளும் கூட்டணி தொடர்பாக எங்களை அணுகி வருகின்றன.
கூட்டணி அமைப்பதில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடு கிடையாது. எப்படி வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியம். எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையில் அமையும். அதே வேளை, உரிய தொகுதி பங்கீடு பெறுவோம்.
என் கூட்டணி எப்போதும் மக்களுடன்தான். சிலர் அப்படி கூறிவிட்டு டெல்லிக்குச் சென்று பேச்சு நடத்தி வருகின்றனர். நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் போட்டியிடும் தொகுதி பற்றி விரைவில் தெரிவிப்பேன்.
கூட்டணி சேரவில்லை என்றால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தயாராக இருக்கிறோம் என்றார் கார்த்திக்.