காக்கா பிரியாணி பீதியில் கோவை-4 பேர் கைது
கோவை: கோவையில் சிக்கன் பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக எழுந்துள்ள புகாரையடுத்து வனத்துறையினர் காக்கா வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் உண்மையை ஒப்புகொண்ட அவர்கள் ஹோட்டல் முதலாளிகளையும் கைகாட்டி உள்ளனர்.
இதையடுத்து ஹோட்டல்களில் விசாரணை நடந்து வருகிறது.
கோவை மதுக்கரையில் உள்ள ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணிக்கு என்ற பெயரில் காக்கா பிரியாணி போடப்படுவதாகவும், இதற்காக சிலர் மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோடு பகுதிகளில் வேட்டையாடி வருவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை ரேஞ்சர் சவுந்தரராஜன், பாரஸ்டர் பழனிச்சாமி, நடராஜன் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினர். காக்கை வேட்டையில் மும்முரமாக இருந்த நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் தோள் உரித்து பிரியாணிக்கு தயாராக வைத்திருந்த 25 காகங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அந்த இடத்திலே குழி தோண்டி புதைத்தனர்.
வனத்துறையினரின் விசாரணையில் அவர்கள் சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்த முத்துமாலை (25), மதுரை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி (20), கிருஷ்ணன் (60), உரிச்சான் (40) என கூறியுள்ளனர். காக்கைகளை வேட்டையாடி குறைந்த விலைக்கு அங்குள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து சில ஹோட்டல் உரிமையாளர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications