செக் போஸ்ட்டில் சிக்கிய ரூ. 32,000 லஞ்சப் பணம்
கோவை: தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாலையார் சோதனைச் சாவடியில், கணக்கில் வராத 32 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாலையார் சோதனைச் சாவடியில் வாகன ஓட்டுநர்களிடம், குறித்த தொகைக்கு மேல் அங்குள்ள அதிகாரிகள் வாங்குவதாக
பரவலான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷண்முகப்பிரியா தலைமையில் இரண்டு குழுக்கள், அந்த சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலையின் ஒரு பக்கத்தில் 18 ஆயிரம் ரூபாயும் மறு பக்கத்தில் 14 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இருவர் மீதும் உதவியாளர்கள் நால்வர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் அந்த பகுதி வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.