பெண் கலெக்டரை விமர்சித்த முலாயம் சிங் யாதவுக்கு நோட்டீஸ்
லக்னோ: பெண் கலெக்டரை தகாத வார்த்தைகளால் பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உ.பி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி மாநிலம் மைன்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவ் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் மாவட்ட கலெக்டர் மினிஸ்தி திலீப்.
இந்தத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த பலரின் துப்பாக்கி லைசென்ஸை மினிஸ்தி முடக்கி வைத்துள்ளார். மேலும் சமாஜ்வாடிக் கட்சியினரிடம் அவர் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தொகுதியி்ல் தேர்தல் பிரசாரத்தின்போது மினிஸ்தியை கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்தார் முலாயம் சிங் யாதவ்.
கூட்டத்தி்ல் அவர் பேசுகையில், ஒரு பெண்ணாக (மினிஸ்தி திலீப்) இருப்பதால் அவருக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். என்னை அடக்கிக் கொண்டு பேசுகிறேன். அவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த நான் விரும்பவில்லை.
அவர் இன்னும் ஒரு வாரத்திற்குள் தன்னை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எனது செல்வாக்கை நான் பயன்படுத்த நேரிடும். தேர்தல் ஆணையத்தில் அவர் மீது புகார் செய்ய நேரிடும்.
அவரது செயல் எனது தேர்தலை பாதிக்கிறது. இதை நான் பொறுத்துக் கொள்ள முடியாது.
அவருக்கு சாதாரண தொண்டருக்கும், கிரிமினலுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது. அவருக்கு அறிவு இல்லாமல் போய் விட்டது. முதலில் அவர் தனது மூளையை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று பேசினார் முலாயம் சிங்.
முலாயம் சிங் யாதவின் இந்தப் பேச்சால் அதிருப்தி அடைந்த கலெக்டர் மினிஸ்தி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பினார். அதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் இதுகுறித்து முலாயம் சிங் யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்குமாறு உ.பி. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.