பெர்ணான்டசுக்கு சீட் தராதது சரியே - சொல்கிறார் மனைவி
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் உடல்நிலை காரணம் காட்டி ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி முசாபர்பூர் தொகுதியில் சீட் ஒதுக்க மறுத்தது சரியான முடிவு தான் என அவரது மனைவி லைலா கபீர் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தேர்தலில் போட்டியிட மாட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முசாபர்பூர் தொகுதி ஒதுக்கப்படாது என அறிவித்தார்.
இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பையும், ஓயாத விமர்சனங்களையும் எழுப்பியது. பெர்னாண்டஸ் கட்சி முடிவை மீறி சுயேச்சையாகப் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத் யாதவ்வின் முடிவு சரி தான் என்கிறார் பெர்ணான்டசின் மனைவி லைலா கபிர் பெர்ணான்டஸ்.
தற்போது பெர்னாண்டஸை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வரும் அவர் கூறுகையி்ல்,
அனைவரும் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் மோசமான உடல்நிலை காரணமாக அவரை பரபரப்பான தேர்தல் வாழ்க்கைக்கு அழைத்து செல்ல வேண்டாம் என அவரது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்.
நாடாளுமன்றத்தில் அவரது நடவடிக்கையை உற்று பார்த்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். அவருக்கு தன்னுடைய உடல் நிலையை பற்றி நன்கு தெரிந்திருந்தால் அவராகவே தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியிருப்பார்.
ஒரு சிறு குழந்தை தீயை தொட வேண்டும் என விரும்பினால் நாம் விட்டுவிட முடியுமா? அது போல தான் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க வேண்டும் என்றார் அவர்.