அத்வானி பிரசார கூட்டம்-மாயாவதி அனுமதி மறுப்பு
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அத்வானியின் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கியுள்ளார்.
அஸம்கர் பகுதியில், மார்ச் 28ம் தேதி மூன்று கூட்டங்களில் பேசுவதாக இருந்தார் அத்வானி. குஷிநகர், மகாராஜ்கன்ச், அஸம்கர் ஆகிய இடங்களில் பாஜகவின் அனல் பறக்கும் பேச்சாளர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து பேசவிருந்தார் அத்வானி.
இந்த நிலையில்தான் பாதுகாப்புக்கு பிரச்சினை இருப்பதாக கூறி இந்தக் கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து விட்டது மாவட்ட நிர்வாகம்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மாயாவதியின் பழி வாங்கும் போக்கு. அவர்தான் இதற்குக் காரணம் என பாஜக கூறியுள்ளது.
உ.பி. மாநிலத்தில் தனது பிரசாரத்தை அஸம்கரிலிருந்துதான் அத்வானி தொடங்கத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் கோணலே முற்றும் கோணல் என்பது போல மாவட்ட நிர்வாகம் அத்வானி பிரசாரக் கூட்டங்களுக்குத் தடை விதித்து விட்டது.
இருப்பினும் இப்பகுதியில், சில முஸ்லீம் இளைஞர்களை போலீஸார் சமீபத்தில் கைது செய்துள்ளதை சுட்டிக் காட்டும் மாவட்ட நிர்வாகம், அவர்களுக்கு டெல்லி பட்லா இல்ல தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், எனவே இங்கு அத்வானி வருகை தந்தால் பிரச்சினை ஏற்படலாம் எனவும், இதனால்தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறுகிறது.