கிருஷ்ணசாமி நின்றால் எதிர்த்து போட்டி-பசுபதி பாண்டியன்
நெல்லை: புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.
தமிழகத்தில் ஜாதி கலவரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். தேர்தலில் தேவர், யாதவர், முத்தரையர், கவுன்டர் உள்ளிட்ட சமுக இயக்க தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் பட்டியலில் எங்கள் சமூகத்தை சேர்த்தால் தேவேந்திர குல வேளாளர் என்ற அடையாளம் அழிக்கப்படுகிறது. எனவே எங்களை ஆதி திராவிடர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். இல்லையெனில் முதற்கட்டமாக 50 ஆயிரம் பேர் முஸ்லிம் மதத்திற்கு மாற திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் நடந்து வரும் ஜாதி கலவரத்திற்கு கிருஷ்ணசாமி தான் காரணம். இதனால் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மரியாதை குறைந்துவிட்டது. கிருஷ்ணசாமியால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தில் 30 ஆயிரம் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேவேந்திர குல வேளாளர் கொடியை கிருஷ்ணசாமி திருட்டுதனமாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணசாமியிடம் கொடி பறிக்கப்பட்டால் அவருக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என்றார் அவர்.