தூத்துக்குடி-பொக்லைன் ஏறி டிரைவர், கிளீனர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி ஏற்ற சென்ற லாரி டிரைவர் மற்றும் கிளீனர் மீது பொக்லைன் இயந்திரம் ஏறியதில், இருவரும் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார்கள்.
பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி நடுத்தெருவை சேர்ந்த கணேசன் மகன் சண்முகம். டிம்பர் லாரி கிளீனர். மேலமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த ராஜமணி மகன் தங்கராஜ். டிரைவர்.
இவர்கள் இருவரும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டு வருவதற்காக டிம்பர் லாரிகளை அங்கு ஓட்டிச் சென்றனர். பின்னர் அங்குள்ள சரக்கு இறக்கும் தளத்தில் லாரியை நிறுத்தி விட்டு அதன் அருகில் படுத்திருந்தனர்.
இந்நிலையில் நிலக்கரியை அள்ளி லாரிகளில் போடுவதற்காக அங்கு ராட்சத பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இந்த இயந்திரத்தை தூத்துக்குடி பக்கிள்புரத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் முத்துகுமார் என்பவர் ஓட்டினார். டிப்பர் லாரி டிரைவர் தங்கராஜூம், கிளினீர் சண்முகம் படுத்திருந்ததை கவனிக்காத முத்துகுமார் வேகமாக பொக்லைன் இயந்திரத்தை ஓட்டி வந்தார்.
அப்போது இவர்கள் இருவர் மீதும் பொக்லைன் இயந்திரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம், தங்கராஜ் ஆகியோர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தெர்மல் நகர் சப்-இன்ஸ்பெக்டர் மகி்மைவீரன் விசாரணை நடத்தி பொக்லைன் டிரைவர் முத்துகுமாரை கைது செய்தார்.