வி.சிக்கு எதிர்ப்பு-மாணவர் காங்கிரசார் போராட்டம்
சென்னை: கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை சேர்ப்பது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்பட்டது ஆகியவற்றை கண்டித்து கோவை மாணவர் காங்கிரசார் சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மதியம் கோவையை சேர்ந்த மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் 75க்கும் மேற்பட்டவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும், விடுதலை சிறுத்தைகளை கூட்டணி சேர்க்க கூடாது என வலியுறுத்தியும் கோரிக்கை வைத்தனர். தலைமையகத்தின் வாசலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் தாமோதரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தலைவர் டெல்லி சென்றிருப்பதால் அவர் வந்தவுடன் இது குறித்து அவரிடம் பேசுவதாகவும் உறுதி அளித்தார்.
ஆனால் இதை ஏற்காத மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீண்டும் வாசலில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர் காங்கிரஸ் கட்சியின் மாநில இணைசெயலாளர் கேஎஸ் பாபு கூறுகையில்,
தேர்தல் முடியும் வரை யாருடைய பதவியையும் பறிக்க கூடாது என்று அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கையில் மாநில தலைவருக்கே தெரியாமல், கோவையில் திட்டமிட்டு மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.
ஏதோ வேகத்தில் பேசிவிட்டனர்...
இந்நிலையில் அங்கு வந்த மாணவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நவீன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தார். நவீன் கூறுகையில்,
தேர்தல்பணிக்காக 3 பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கோவை நிர்வாகிகளை மாற்றி இருக்கிறார்கள். இது பற்றி நான் அகில இந்திய செயலாளரிடம் பேசி நல்ல முடிவை காண்பேன்.
விடுதலைச்சிறுத்தைகள் பற்றி ஏதோ வேகத்தில் மாணவர் காங்கிரசார் கருத்து தெரிவித்து விட்டனர். எங்களை பொறுத்தவரையில் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி வேண்டுகோள் படி, தமிழகத்தில் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications