திமுகவுடன் கருத்து வேறுபாடில்லை-இளங்கோவன்
கோபி: திமுகவுடன் எங்களுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்கள் கூட்டணியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம் என மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோபியில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தற்போது சிறு சிறு கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளின் நாடியை பிடித்து பார்க்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சிறிய கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றால் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் அவர்களுக்குத் தான் நஷ்டம்.
சத்தி-சாம்ராஜ் நகர் ரெயில்வே திட்டப்பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இதற்கான திட்டப்பணி தடைபட்டு கிடக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் பணியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.
பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்ற 48 மணி நேரத்துக்கு பின்பு தான் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன் வந்ததது.
பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்த சாதனைகளையும், தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகள் செய்த சாதனையையும் சொல்லி வாக்கு கேட்போம். திமுக -கங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனறார்.