பெண் போலீஸ் படுகொலை-தலை எங்கே?
சிவகங்கை: சிவகங்கை அருகே காதல் தகராறில் பெண் போலீஸ் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் மட்டும் கிடைத்துள்ளது. தலையைக் காணவில்லை. போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள கோவானூர் கிராமத்தில் கடந்த 11ம் தேதி ஒரு சாக்கு மூட்டை சிக்கியது. அதில் இளம் பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்தார். அவரது தலை அதில் இல்லை.
இதையடுத்து போலீஸார் அந்த உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர். தலையை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே அந்தப் பெண் யார் என்று விசாரணை நடந்தது. அதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. பிணமாகக் கிடந்த பெண்ணின் பெயர் வேல் விழி. 27 வயதான அவர் திண்டுக்கல் மாவட்டம் எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர்.
மதுரை ஆறாவது பட்டாலியன் ரிசர்வ் போலீஸில் உதவித் தலைமை ஏட்டாக இருந்து வந்தார். 10ம் தேதி முதலே அவரைக் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குணசேகரன் தல்லாகுளம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 21ம் தேதிதான் அவர் புகார் கொடுத்துள்ளார்.
காதல் பிரச்சினை அல்லது குடும்பச் சண்டையில் வேல்வழி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேல்விழி குடும்பத்தினரை அவமானப்படுத்தும் நோக்கில்தான் பிணத்தை நிர்வாண கோலத்தில் போட்டு விட்டுச் சென்றுள்ளதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
வேல்விழியின் செல்போனைக் கைப்பற்றியுள்ள போலீஸார் அதில் பதிவாகியுள்ள எண்கள், அவரது நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் கொலை செய்து விட்டு, உடலை கோவனூரில் போட்டு விட்டுச் சென்றிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications