கொளத்தூர் மணி: குண்டாஸ் ஏன்?-அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பெரியார் திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது. பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் திண்டுக்கல்லில் 20.2.2009 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈழம் எரிகிறது' என்ற தலைப்பில் கொளத்தூர் மணி பேசினார்.
இந்திய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகவும் கொளத்தூர் மணி பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யும்படி கொளத்தூர் மணி திண்டுக்கல் 2-வது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். எனவே, ஜாமீன் கேட்டு திண்டுக்கல் செசன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நிலுவையில் இருக்கும்போதே கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடந்த 10-ந் தேதி பிறப்பிக்கப்பட்டது.
ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட அதிகாரம் கிடையாது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசும் ஒருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய முடியாது.
இதுகுறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதான விவரத்தை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை.
போதுமான குற்றச்சாட்டுகள் இல்லாமல் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது அரசியல் சட்டம் 21 மற்றும் 22-வது பிரிவுக்கு எதிரானது. ஆகவே, எனது சகோதரர் கொளத்தூர் மணியை விடுதலை செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை நேற்று நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் நான்கு வாரங்களுக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசு, திண்டுக்கல் ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப பெஞ்ச் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications