நாளை உகாதி: கருணாநிதி, ஜெ. வாழ்த்து
சென்னை: தெலுங்கு மற்றும் கன்னட மொழி மக்களின் புத்தாண்டான உகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள செய்தியில்,
உகாதியை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை ஏற்படுத்தி, நாட்டின் வளமைக்கும், செழிப்புக்கும், உகாதி வழிவகுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தெலுங்கு மொழி பேசும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கும் தேவையான வாய்ப்பு வசதிகள் அனைத்தையும் வழங்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
தெலுங்கு மொழி பேசும் மக்களின் சமூக, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் தெலுங்கு புத்தாண்டு பிறக்கும் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி தெலுங்கு மொழியையும் அம்மொழி பேசும் மக்களையும் அரசு பெருமைப்படுத்தியுள்ளது.
உகாதி திருநாளை கொண்டாடி மகிழும் தெலுங்கு மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும், நலமும், வலிவும், பொலிவும் சேரட்டும் என உளமார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், புத்தாண்டு திருநாளாம் உகாதி திருநாளை விமரிசையாக கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரது வாழ்விலும் வளம் செழிக்கும் ஆண்டாக, நலம் தழைக்கும் ஆண்டாக, செல்வம் கொழிக்கும் ஆண்டாக, தொழில் வளம் சிறக்கும் ஆண்டாக, இந்த புத்தாண்டு விளங்கட்டும், வாழ்வில் புது வசந்தம் சேர்க்கட்டும்.
இந்தியாவில் விரைவில் நல்லாட்சி மலர அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டு, ஜனநாயக கடமைகளை ஆற்ற முன்வர வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்து யுகாதி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரம்பரியத்தை பேணிக்காக்கும் அதே சமயத்தில், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வின் அடிப்படையில் தமிழ் மக்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழக் கூடியவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள். அனைவரது வாழ் விலும் வளம் செழிக்கும் ஆண்டாக, நலம் தழைக்கும் ஆண்டாக, செல்வம் கொழிக்கும் ஆண்டாக, தொழில் வளம் சிறக்கும் ஆண்டாக, இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்.
பூக்கட்டும் வாழ்வில் புது வசந்தம். அது சேர்க்கட்டும் இன்பம் ஆண்டு முழுவதும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications