ஒரு சீட் மட்டும் தந்தால் ஏற்க முடியாது - மனித நேயக் கட்சி
சென்னை: திமுக கூட்டணியில் எங்களுக்கு கேட்டுள்ள தொகுதிகளையே கொடுக்க வேண்டும். வெறும் ஒரு சீட்டை மட்டும் தந்தால் கண்டிப்பாக அதை ஏற்க மாட்டோம் என மனித நேயக் கட்சி கூறியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி மனித நேயக் கட்சி. தமுமுகவின் அரசியல் கட்சி இது.
திமுக கூட்டணியில், மனித நேயக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியைக் கொடுக்க திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி மனித நேயக் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்தில் தமுமுக மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் பேசுகையில்,
அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த மாதம் 7-ந் தேதி, மனிதநேய மக்கள் கட்சியாக தொடங்கப்பட்டது.
அடித்தட்டு மக்களுக்கும் குரல் கொடுப்பவர்களாக, ஊழலை வேரோடு சாய்ப்பவர்களாக மனிதநேய மக்கள் கட்சியினர் செயல்படுவார்கள்.
இது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. தி.மு.க. கூட்டணியில், தமிழகம் முழுவதும் தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக தொண்டர்கள் அதிகம் உள்ள கட்சியாக உள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பின்னர் மத்திய சென்னை, வேலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் 20 முதல் 25 சதவீதம் வாக்குகளைக் கொண்ட கட்சியாக மனிதநேய மக்கள் கட்சி உள்ளது. இது தலைவர்களை மையமாகக் கொண்ட கட்சி அல்ல. மக்களை மையமாகக் கொண்டு இயங்கும் கட்சி.
'உதயசூரியன்' வேண்டாம் ...
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இரவல் சின்னத்திலும் போட்டியிட மாட்டோம். தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிய இடம் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம். இல்லையென்றால் தனித்துப் போட்டியிட தயாராக இருக்கிறோம். அப்படி நாங்கள் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் பெரிய கட்சிகளுக்கு மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.