பாமகவுக்கு இணையாக சீட் கோரும் மதிமுக
சென்னை: பாமகவுக்கு கொடுக்கப்படவுள்ளதைப் போலவே தங்களுக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 8 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் மற்றும் சில உதிரிக்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. திமுக அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய கட்சி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
கூட்டணி ஆள் கிடைக்காத பாஜக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் கார்த்திக்கின் நாடாளுமன்ற மக்கள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஆனால், கார்த்திக் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை.
விஜயகாந்த் மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறி, தனித்து களமிறங்குகிறார். ஆனாலும் அவரை இழுக்க காங்கிரஸ் இன்னும் முயன்று வருகிறது.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை சீட் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை குறித்து எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 7 தொகுதியில் போட்டியிட விரும்பி அவைகளின் பட்டியலை வழங்கியுள்ளன. இவர்களுக்கு அதிகபட்சமாக தலா 3 தொகுதிகள் கிடைக்கலாம்.
இந் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவுடன் ஒட்டிகொண்டுள்ள மதிமுக, தங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பாமகவை விட கூடுதலாக 1 தொகுதி. அதாவது 8 தொகுதி ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளது.
கடந்த 1998ல் அதிமுக கூட்டணியில் இவ்விரு அணிகளும் இடம்பிடித்திருந்த போது இவர்கள் இருவருக்கும் அதிமுக தலா 5 தொகுதிகளை ஒதுக்கியது. இதே போல் இம்முறையும் அதிமுக பாராபட்சம் காட்டக் கூடாது என் மதிமுக கூறுகிறது.
ஆனால், 8 தொகுதிகளை அதிமுக தருமா என்று தெரியவில்லை. பாமகவைப் போலவே ராஜ்யசபா சீட் பிளஸ் 7 தொகுதிகள் தரப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து தோல்வியடைந்த நிலையிலும் கூட்டணியை கைவிடாமல் இருக்கும் மதிமுகவுக்கு அதிமுக உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் குரலாக உள்ளது.












Click it and Unblock the Notifications