ஆலங்குளத்தில் கந்து வட்டி கொடுமை- மக்கள் அவதி
ஆலங்குளம்: ஆலங்குளம் பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டி கொடுமையினால் ஏழை மற்றும் விவசாய மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது பூலாங்குளம். சமீபகாலமாக இந்த ஊரில் கந்து வட்டி கொடுமை அதிகரித்து வருகிறது. இங்கு விவசாயம் மற்றும் கூலி வேலை செய்வோர் அதிகம் உள்ளனர்.
குடும்ப செலவிற்காக பிறரிடம் இவர்கள் சிறிதளவு பணம் வாங்குகின்றனர். கடன் கொடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்து வருகின்றனர்.
வீட்டு பத்திரம் மற்றும் நகை போன்றவற்றை அடமானமாக பெற்றுதான் இந்த கும்பல் கடன் கொடுக்கிறார்கள். சிறிய தொகையை கொடுத்து விட்டு நீங்கள் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து வீட்டு மதிப்பை விட அதிகமாகி விட்டது என்கிறார்கள்.
வீட்டை தருகிறாயா அல்லது பணத்தை கொடுக்கிறாயா என்று மக்களை மிரட்டி வருகின்றனர். பின்பு கந்து வட்டி கும்பல் வலுகட்டாயமாக கடன் வாங்கியவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி அதை தனக்கு சொந்தமாக்கி கொள்கிறது.
பூலாங்குளத்தில் இவ்வாறு கந்துவட்டி கும்பலிடம் வீ்ட்டை இழந்தவர்கள் பலர் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் கந்து வட்டி கும்பலுக்கு சொந்தமாகி உள்ளது. கந்து வட்டி கொடுமையால் 2பேர் தங்களது மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஊரை விட்டே வெளியேறி விட்டனர். பிள்ளைகள் திருமண வயதை எட்டிய நிலையில் இரு குடும்பங்களும் தவிக்கின்றன.
வெளியூர்களில் வந்து மிரட்டல் தோனியில் கந்து வட்டி வசூலிக்கும் இத்தகைய கும்பலின் அட்டுழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். பூலாங்குளம் மட்டுமின்றி ஆலங்குளம் சுற்றுபுற பகுதிகளில் கந்து வட்டி கொடுமை தலைவிரித்தாடுகிறது.