பாமக வந்துவிட்டதால் அதிமுக கூட்டணி வெல்லும்-சோ
சென்னை: அதிமுக கூட்டணிக்கு பாமக சென்றது எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. இது எதிர்பார்த்தது தான் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட போவதாக பாமக பொது்க்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை சீட்டும், 1 மாநிலங்களவை சீட்டும் கொடுக்கப்பட இருக்கிறது.
இது குறித்து தயாநிதி மாறன் கூறுகையில்,
இந்த முடிவு எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. இது திர்பார்க்கப்பட்ட ஒன்று தான். திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2004 தேர்தலை போல் இம்முறையும் வெற்றி பெறுவோம். கடந்த முறை பல சுமைகளை தூக்கிவந்தோம். தற்போது சுமை வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.
அதிமுக வெல்லும்-சோ:
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ கூறுகையில், அதிமுக தென் தமிழகத்தில் மிக பலமானதாகத் திகழ்கிறது. பாமகவுக்கு வட தமிழ்நாட்டில் செல்வாக்கு இருக்கிறது. தற்போது பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.
காங். இருந்தாலே வெற்றி தான்-மொய்லி:
மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் எந்த திராவிடக் கட்சியோடு கூட்டணி அமைக்கிறதோ அந்தக் கூட்டணியே வென்று வந்திருக்கிறது. பாமக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும் என்றார்.
இனி தோல்வி தான்-பாஜக
பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சியில் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்க நிலையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர். திட்டங்களை நிறைவேற்றியதாக பொய்யான புள்ளி விவரங்களை தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காங்கிரஸ் ஒரு திறமையற்ற அரசு.
இலங்கை தமிழர் பிரச்சினை மிக மோசமானதற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுதான் காரணம். அங்கு தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து நடத்தி வருகிறது. பிரபாகரன் மீதான கோபத்தை ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் காட்டுகிறார்கள். இதற்கு சோனியாவும், கருணாநிதியும் பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளனர். இதை அறிந்து தான் டாக்டர் ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாமல் வெளியே வந்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் அரசியல் திசை காட்டி, அடுத்து மத்தியில் யார் ஆட்சி அமைப்பார், யார் வரப் போவதில்லை என்பதை முன்கூட்டியே அறிந்து வெளியே வந்துள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்பது உறுதி. காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.
தமிழ்நாட்டில் சமத்துவ மக்கள் கட்சியுடன் 2 சுற்று பேச்சு நடத்தி இருக்கிறோம். நடிகர் கார்த்திக்கும் அணுகியுள்ளார். 30ம் தேதி கட்சியின் தேர்தல் குழு கூடும். அப்போது பாஜக அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறுகிறது என்பது தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications