இன்னும் ஒரு முடிவும் எடுக்கலே-கார்த்திக்

அரசியல் கூட்டணிகள் படு வேகமாக உருவாகி முடிந்து கொண்டிருக்கின்றன. கிடைத்த கட்சிகளை வைத்துக் கொண்டு அணிகளை உருவாக்கி பிரசாரத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன பெரிய கட்சிகள்.
திமுக அணி முடிவாகி விட்டது. அதிமுக அணியும் இன்று ஒரு வழியாக இறுதியாகி விட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்பாளர்களையே அறிவித்து விட்டார். பிரசாரத்தையும் தொடங்கி போய்க் கொண்டே இருக்கிறார்.
பாஜக தான் தனக்கென ஒரு அணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெறுகிறது. கூடவே கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியும் இணையும் என்கிறார்கள்.
இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், எங்களது நிலை குறித்து பத்திரிகைகளில் ஏதேதோ செய்திகள் வருகின்றன. ஆனால் நாங்கள் இன்னும் முடிவே எடுக்கவில்லை. 29ம் தேதி திருப்பூரில் எங்களது கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டியுள்ளேன். அங்குதான் முடிவெடுப்போம். முடிவெடுத்ததும் ஏப்ரல் 1ம் தேதி நானே சென்னையில் கூட்டணி குறித்து அறிவிப்பேன். அன்றே தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.
14 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்று கண்டறிந்துள்ளோம். அதில் 7 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மற்றவற்றில் பிறரின் வெற்றிகளை நாங்கள் நிர்ணயிக்கும் சக்தியுடன் உள்ளோம்.
திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருப்பூர், தேனி போன்ற தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளேன். அதில் ஏதாவது ஒன்றில் நான் போட்டியிடுவேன்.
பாஜகவுடன் பேசி வருவது உண்மைதான். ஆனால் அவர்கள்தான் எங்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள் என்றார் கார்த்திக்.












Click it and Unblock the Notifications